23 . ஈகை
221 . வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து .
பொருள் :
வறுமையில் இருப்போர்க்குக் கொடுப்பதே ஈகை ஆகும் . மற்றவையெல்லாம் தனக்கு வரும் பயனை எதிர்பார்க்கும் செயலே ஆகும் .
222 . நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று .
பொருள் :
நல்ல வழி என்றாலும் பிறரிடமிருந்து பொருளைப் பெறுதல் கூடாது . மேலுலகம் கிட்டாது எனினும் பிறர்க்குத் தருவதே சிறந்தது .
223 . இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள .
பொருள் :
தன்னிடம் ஏதும் இல்லை என்று ஒருவன் கூறும் முன்பே அவனுக்கு உதவி செய்யும் குணம் , நல்ல குடியில் பிறந்தவனிடத்தில்தான் காணப்படும் .
224 . இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு .
பொருள் :
தம்மிடம் பொருள் பெற்றவனின் முகம் இன்பத்தால் மலரும் வரை , ஈகையானது தீமையே ஆகும் .
225 . ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் .
பொருள் :
தவவலிமை உடையவர்கள் பசியைப் பொருத்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் . அவர்களின் ஆற்றலைவிட மேலானவர்கள் அப்பசியைப் போக்குபவர்களே ஆவர் .
226 . அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி .
பொருள் :
பொருள் இல்லாதவனின் பசியைத் தீர்க்கும் ஈகைச்செயலே , பசியை நீக்கிய செல்வந்தனின் செல்வத்தை சேர்த்து வைக்கும் பெட்டகம் ஆகும் .
227 . பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது .
பொருள் :
பகுத்து உண்ணும் குணத்தைத் தன்னிடம் கொண்டு உள்ளவனை , பசி என்னும் தீய நோய் ஒருநாளும் தீண்டாது .
228 . ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் .
பொருள் :
பிறர்க்குக் கொடுத்து உதவுவதால் வரும் இன்பத்தை அறியாதவர்கள் , யார்க்கும் தராது தான் சேர்த்துவைத்த செல்வம் தன் கண்முன்னே அழிவதைக் காண்பார்கள் .
229 . இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் .
பொருள் :
தான் சேர்த்த செல்வத்தை தான் மட்டுமே உண்பது என்பது , இல்லை என்று பிறரிடம் இரப்பதைவிடக் கொடுமையாகும் .
230 . சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை .
பொருள் :
சாவதைவிடக் கொடுமை வேறொன்றுமில்லை . இருப்பினும் , இரப்பவர்க்கு எதுவும் தர இயலாத நிலையில் அந்தச் சாவும் இனிமையானது ஆகிவிடும் .
கருத்துகள்
கருத்துரையிடுக