24 . புகழ்
231 . ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு .
பொருள் :
ஏழைகளுக்கு தேவையானவற்றை அளித்து புகழோடு வாழ்தல் வேண்டும் . அதைத் தவிர உயிருக்கு நன்மை ஏதும் இல்லை .
232 . உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவர்மேல் நிற்கும் புகழ் .
பொருள் :
சான்றோர்கள் பெருமையாக என்று கூறுவதெல்லாம் , வேண்டுபவர்க்கு தேவையானவற்றைக் கொடுத்து உதவுபவனின் புகழையே ஆகும் .
233 . ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல் .
பொருள் :
உயர்ந்த புகழைத் தவிர , நிலையற்ற இந்த உலகில் நிலைத்திருக்கும் பொருள் ஏதும் இல்லை .
234 . நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு .
பொருள் :
இந்த உலகில் நிலைத்து நிற்கும் புகழைப் பெற்றால் , வானுலகமும் தேவர்களைப் போற்றாமல் அவரையே போற்றும் .
235 . நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது .
பொருள் :
வறுமையிலும் புகழை வளர்த்துக் கொள்வதும் , சாவிலும் அப்புகழ் அழியாது நிலைத்திருக்கச் செய்வதும் அறிவுடையோரைத் தவிர வேறு யார்க்கும் இயலாது .
236 . தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று .
பொருள் :
எந்த துறையில் செயல் ஆற்றினாலும் அதில் புகழ் அடைய வேண்டும் . அவ்வாறு இயலவில்லை என்றால் அத்துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது .
237 . புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் .
பொருள் :
புகழோடு வாழமுடியாதவர்கள் தம்மையே நொந்து கொள்ளாமல் , தம்மை இகழ்ந்து பேசுபவரை நொந்து என்ன பயன் ?
238 . வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின் .
பொருள் :
தமக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழைப் பெறாவிட்டால் , இவ்வுலகத்தாரின் பழிக்கே ஆளாக வேண்டும் .
239 . வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம் .
பொருள் :
புகழ் அடையாதவரின் உடம்பைத் தாங்கி நிற்கின்ற நிலம் வளம் இல்லாது பயனற்றுப் போகும் .
240 . வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர் .
பொருள் :
தம்மேல் பழி இல்லாமல் வாழ்வோரே வாழ்பவர் . புகழ் இல்லாமல் வாழ்பவர் வாழ்ந்தும் வாழாதவரே ஆவர் .
கருத்துகள்
கருத்துரையிடுக