25 . அருளுடைமை
241 . அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள .
பொருள் :
அருள் செல்வமே செல்வங்களிலெல்லாம் சிறந்தது . பொருள் செல்வம் இழிந்தவர்களிடமும் உள்ளது .
242 . நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை .
பொருள் :
நல்ல வழியில் ஆராய்ந்து அருள் உடையவராய் வாழ வேண்டும் . பல வழிகளைத் தேர்ந்தெடுப்பினும் அதுவே துணையாய் விளங்கும் .
243 . அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் .
பொருள் :
அருள் நிறைந்த உள்ளம் உடையவர்கள் , அறியாமை என்னும் இருள் சூழ்ந்த உலகில் நுழைய மாட்டார்கள் .
244 . மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை .
பொருள் :
பிற உயிர்களைக் காக்கும் அருள் உள்ளம் கொண்டவர்க்கு , தன் உயிரைப் பற்றி அஞ்சி வாழும் நிலை இல்லை .
245 . அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி .
பொருள் :
அருள் உள்ளம் கொண்டவர்க்கு துன்பம் இல்லை . காற்று இயங்கும் இந்த உலகிலுள்ள அருளாளர்களே அதற்கு சாட்சியாவர் .
246 . பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார் .
பொருள் :
அருள் இல்லாமல் தீங்கு செய்வோரை , அறமாகிய இலட்சியத்தை மறந்தவர் என்றே சான்றோர் கூறுவர் .
247 . அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு .
பொருள் :
செல்வம் இல்லாதவர்க்கு இந்த உலக வாழ்க்கை சிறப்பாக அமையாதது போன்று , அருள் உள்ளம் இல்லாதவர்க்கு ஆன்மிக வாழ்க்கையும் சிறப்பாக அமையாது .
248. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது .
பொருள் :
பொருளை இழந்தவர் ஒரு காலத்தில் அதை மீண்டும் பெறுவர் . அருள் குணத்தை இழந்தவர் அதை எக்காலத்தும் பெற முடியாமல் துன்பம் அடைவர் .
249 . தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் .
பொருள் :
அருள் உள்ளம் இல்லாதவன் செய்கின்ற அறம் , அறிவற்றவன் ஒரு நூலின் உண்மைப் பொருளை அறிந்து கொள்ள முயற்சிப்பதைப் போன்றதே ஆகும் .
250 . வலியார்முன் தன்னை நினைக்காதவன் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து .
பொருள் :
தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்தும்போது , தன்னைவிட வலியவர்முன் , தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும் .
கருத்துகள்
கருத்துரையிடுக